top of page

நேர்காணல் - பாகம் 1

நேர்காணல் : எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்

கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுடன் ஒரு நேர்காணல் :

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பத்து கி.மீ.தொலைவில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அடிப்படையில் இவர் ஒரு விவசாயி. நாற்பது வயதுக்கு மேல் பேனா பிடித்து எழுத ஆரம்பித்து தமிழ் இலக்கியத்தில் உன்னதமான இடத்தைப்பிடித்தவர். 99 வயதாகும் எழுத்தாளர் கி.ரா.

வருகைதரு பேராசிரியராக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய அழைப்பு வந்தவுடன் இடம் பெயர்த்தவர். அப்போதுமுதல் புதுச்சேரிவாசம்.

கோவில்பட்டியில் இருந்த காலங்களில், அவரோடு வாரம் ஒரு முறையாவது சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு கனாக்காலம் தான். தலைமுறை இடைவெளி இல்லாமல் பேசும் எழுத்தாளர் கி.ரா. அவர்களோடு ஒரு நேர்காணல் :


கேள்வி : ராஜநாராயணீயத்திற்குள் நுழைய வேண்டுமானால், " கதவு "

திறந்து தான் போக வேண்டும். " கதவு " சிறுகதை கடிதமாக எழுதப்பட்ட ஒரு செய்தி என்று கேள்விப்பட்டுள்ளோம். அந்த கதை பிறந்த வரலாற்றை கொஞ்சம் சொல்லுங்களேன்.


கி.ரா. : ஹா.ஹா..ஹா. அது நெறைய இருக்கப்பா..நான் எப்பவுமே நீண்ட கடிதங்கள் எழுதுவதுண்டு. அப்படித்தான் தீப.நடராஜனுக்கு ஒரு கடிதம் எழுதறப்ப இந்த விஷயத்தை எழுதினேன். கடிதத்தில் இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒடனே ஒரு நகல் எடுத்து வச்சுக்கிட்டேன். அந்த நேரம் " தாமரை " இதழ் ஆரம்பிக்கனும்னு பேச்சு வந்தது. அதுக்கு ரகுநாதனை ஆசிரியராக போடணும்னு ஒரு முடிவு. இது பத்தி பேசணும்னு ஜீவானந்தம் சொல்றாரு. எங்கே..இடைசெவல்ல வச்சு ..தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தவரு எங்க ஊருக்கு வாராரு..நேரங்கெட்ட நேரமாச்சு அப்போ. நேரமாச்சு இனிமேல் என்னத்த பேச..அப்படின்னு சொன்னதும் சரின்னுட்டு போயிட்டார். அப்போ புது வீட்ல இருந்தேன்..தனி வீடு ஒன்னு இருக்குல்லா..அங்கே..அப்போ வீட்டுக்கு வந்த ரகுநாதன் அலமாரில ஏதாச்சும் புஸ்தகம் இருக்கான்னு பார்க்கையிலே ஒரு புஸ்தகத்தில் இருந்து ஒரு கவரு கிடைக்குது..அதுல ஒரு கதை..கதவு கதை இல்ல..மாயமான்னு ஒரு கதை..அதை எடுத்துப் பார்த்தவரு " யோவ்..நீரு கத எல்லாம் எழுதுவீரா " ன்னு கேட்டாரு. என்னத்தையோ எழுதியிருப்பேன்ன்னு சொன்னேன். அந்தானைக்கு அந்த கதையை எடுத்து வச்சுக்கிட்டு, இதை நான் கொண்டு போறேன்..தாமரை இதழ் ஆரம்பிச்சா, அதுல முதல் சிறுகதையா இது வரும் ன்னு சொல்லிட்டு போனாரு. ஆனால், அது இல்லாம ஆயிருச்சு.

என்ன பண்ணுனார்னா, அதை " சரஸ்வதி " க்கு அனுப்பிச்சிட்டாரு.

" சரஸ்வதி " க்கும் இவங்களுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. சரஸ்வதிக்கு எதிரா தாமரை இதழ் கொண்டு வரணும்னு ஆரம்பிச்சாங்க. சரஸ்வதி இதழில் வந்த என்னோட கதையை ஜீவானந்தம் படிச்சிருக்காரு. படிச்சுட்டு என்கிட்ட பேசினார்.." உங்களோட மாயமான் கதையைப்படிச்சேன்..ரொம்ப நல்லா இருந்தது. தாமரைக்கு ஒரு கதை எழுதி தரணும்னு கேட்டார்.


இதுக்கு மத்தியில என்ன நடந்ததுன்னு கேட்டா, ஆனந்த விகடன் ஒரு பெரிய சிறுகதை போட்டி நடத்துதான்.. அதைப்படிச்சுட்டு, வீட்ல கணபதி " நீங்க இதுக்கு ஒரு கதை எழுதுங்களேன்னு " சொல்றாங்க..நான் கதையே எழுதுறது இல்ல..எனக்கெல்லாம் கெடைக்காதும்மா ன்னேன்.

அனுப்பி வைக்கறதுல என்ன இருக்குன்னு சொன்னாங்க..உடனே, கதவு கதையை நகல் எடுத்து ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைச்சேன். முடிவு வந்துச்சு. மொத பரிசு இல்ல..ரெண்டாம் பரிசு இல்ல..மூணாவது பரிசும் இல்ல..அடுத்து பதினஞ்சு இதழ்களுக்கு கதை வெளியிடுவான்ல..அதுலேயும் இல்ல..அப்ப இவன் குப்பை தொட்டியில் போட்டுட்டான்னு நினைச்சுக்கிட்டேன்.. அப்படியாகிப்போச்சு.




இதை தாமரைக்கு அனுப்பினேன். தாமரை பொங்கல் மலரில் இது வருது. பாருங்க..இந்த கதவு கதைக்கு ரெட்டைக்கதவை படமா போட்டிருக்கான்..(சிரிக்கிறார் ) எல்லோரும் சிரிச்சாங்க..அதற்கப்புறம் இந்த கதையை போடுறவங்க அத்தனை பேருமே ரெட்டைக்கதவு போடுறாங்க..அவங்க யாரும் ஒத்தைக்கதவை ஜென்மத்திலேயும் பாத்ததே இல்ல போலிருக்கு. ஒத்தைக்கதவுல தான் குழந்தைங்க விளையாடும்..அது தான் வசதி..

சுந்தர ராமசாமிட்ட இருந்து ஒரு லெட்டர் வருது. அப்போ அவர் யாருன்னு எனக்கு தெரியாது. கதை ரொம்ப பிரம்மாதமா வந்திருக்கு. தமிழ்ச்சூழலில் இப்படி ஒரு கதை வந்ததே கிடையாது. மற்ற கதைகள்ல இருந்து வேறுபடுது. சொல் வேறுபடுது..விஷயங்கள் வேறுபடுது.

வடிவங்கள் வேறுபடுது. எல்லோரும் இதை கவனத்தில் கொள்றாங்கன்னு சொல்றாரு. இது " செகாவிய பாணி எழுத்து " என்று சொல்லலாம் அப்டிங்கறாரு..சொல் அப்படி இருக்கு..

அப்புறம் கிருஷ்ணன் நம்பி ஒரு கடிதம் எழுதுறாரு. கதை ரொம்ப நல்லா இருக்குன்னு.


கேள்வி : உங்களோட " கோபல்ல கிராமம் " நாவல் வந்த புதிதில் அது நாவல் வகையில் சேர்ந்தது இல்லை என்று பலரும் சொன்னாங்களாமே ?

இப்ப இந்த " கதவு " வந்தாச்சா..அடுத்தால " கோபல்ல கிராமம் " வருது.

கோபல்ல கிராமத்தின் கருவோட மூளை என்னன்னு கேட்டால்..நான் எங்க ஊருல ஒரு கவுண்டர் கல்யாண நிச்சயதார்தத்துக்கு போனேன்..கன்னட கவுடா ன்னு சொல்லுவாங்க. என்னையும் அழைச்சுருந்தாங்க..நானும் போயிருந்தேன். அந்த நிச்சயதார்த்த நேரம் வந்தவுடனே ஒருத்தர் என்ன பண்ணார்னா ..ஒரு உலக்கையை எடுத்துக்கிட்டு வாசல் பக்கம் போய் நின்னுக்கிட்டார். என்ன பண்ணார்னா பிரகடனப்படுத்தின மாதிரி சொன்னார் " துலுக்கன் வர்றான்..துலுக்கன் வர்றான்.." ன்னு மூணு தடவ சொன்னார். அப்புறம் தட்டை மாத்திக்கிட்டாங்க..நிச்சயதார்த்தம் முடிஞ்சு போச்சு. அவர்கிட்டே போயி கேட்டேன். இப்போ என்னமோ சொன்னீங்களே ..அது ஏன்னு. " அது என்னமோ அந்தக்காலத்துல நடந்ததுன்னு சொல்றாங்க..துலுக்க ராஜா கல்யாணம் ஆகாத பொண்ணை தூக்கிட்டு போயிருவாராம்..கல்யாணம் பண்ணியாச்சுன்னா தூக்க மாட்டார். அதனால்தான்.." அப்படின்னாரு. நான் வீட்டுக்கு வந்து என்னோட பாட்டிட்டே சொன்னேன் " பாட்டி..எனக்கு வேடிக்கையா இருக்கு " பாட்டி சொன்னாள் " வேடிக்கை இல்லப்பா..நாம வந்ததும் இப்படித்தான். நாம இங்க ஆந்திராவில் இருந்து ஏன் வந்தோம்னா இதுக்காகத்தான். நம்ம பொண்ணை அவரு இந்த மாதிரி பண்ணிடுவாரோன்னு தான் ஓடி வந்தோம்.."


எனக்கு இதுக்கு முன்னாலேயே சில விஷயங்கள் தெரியும். ஏன் வளமாய் இருந்த காவிரிக்கரையை எல்லாம் விட்டுப்போட்டு இந்த கள்ளிக்காட்டு பகுதிக்கு வந்து வீடு கட்டணும் ன்னு நினைச்சேன். பாட்டிதான் சொன்னாள் ..சென்னாதேவி காவிரிக்கரையிலேயே செத்துப்போனாள்..அங்கேயே ஏகப்பட்ட நிலங்கள் சும்மா கெடந்ததாம்..இப்படி இங்கன வந்துட்டாங்களே ன்னு பாட்டி சொன்னது மனசுல இருந்துட்டே இருந்தது. சரி, இத எழுதுவோம்னு எழுத ஆரம்பிச்சேன். எழுதுவேன். பொறவு திருத்துவேன்..நண்பர்கள் சிலர் வந்து சில பக்கங்களை படிச்சு பார்த்துட்டு " அடேங்கப்பா..பிரமாதமா இருக்கேன்னு " சொன்னாங்க. அது என் மடியிலேயே கெடக்குது. படிப்பேன்..கொஞ்சம் திருத்துவேன்..தொடராக பண்ணனும்னு நண்பர்கள் ஆசைப்பட்டாங்க.. குமுதம் இதழில் கேப்போமேன்னு கேட்டேன். அவங்க முதல் அத்தியாயத்தை மாத்திரம் அனுப்புங்கோன்னு சொன்னாங்க. முதல் அத்தியாயம் வெறும் வர்ணனை..அதனால ரெண்டாவது அத்தியாயத்தையும் சேர்த்து அனுப்பினேன். பதிலே வரல. கொஞ்ச நாலு கழிச்சு சொன்னாங்க..ரொம்ப நல்லா இருக்கு.

ஆனால், குமுதத்துல தொடரா கொண்டு வர ஏலாதுன்னு சொல்லிட்டாங்க..ஆனந்தவிகடன்ல கேப்போம்னு கேட்டேன். அவங்களும் அதேமாதிரி சொன்னாங்க.. எழுந்து என் மடியில் கெடக்கு. எட்டு வருசமா கெடக்குது..நாவல் எழுதவே ஏழு ஆண்டு ஆயிருச்சு.. லட்சுமி கிருஷ்ணமூர்த்தின்னு ஒரு அம்மா ஒரு அறிவிப்பு சொல்றாங்க.. எந்த இதழிலும் வராத கையெழுத்து பிரதியாய் நாவல் இருந்தா ..அத படிச்சு பார்த்துட்டு நூலாய் போடலாம்னு இருக்கேன்ன்னு. உடனே..இந்தா பிடி..ன்னு இதை அனுப்பிட்டேன். வரணும்லா..வரல..

அவங்களுக்கு எதோ ஒன்னு உறுத்துது..இந்த மாதிரி ஆளுக கிளம்பி வந்துரக்கூடாதேன்னு..இதுல கெட்ட வார்த்தை ரொம்ப இருக்கு..அதை எல்லாம் நீக்கணும் ன்னார். நான் நீக்க முடியாதுன்னு சொன்னேன். இதை இப்படியே போட முடியாதேன்னார்.

அப்போ திருப்பி அனுப்புங்கோன்னு சொல்லிட்டேன். அவங்க என்ன செஞ்சாங்கன்னா..ஒரு எழுத்தாளர் அவங்களை பார்க்க வந்தாரு.


அவருட்ட வாசிக்க கொடுத்துருக்காங்க..அவரு சொன்னாராம்..நீங்க சொல்ற கெட்ட வார்த்தையை எங்க அப்பா ஒரு நாளைக்கு நூறு மட்டம் சொல்வாரு..இது ரொம்ப சகஜம்..கிராமத்தை நீங்க அறியாதவங்க..அங்க அப்படிதான் பேசுவாங்க..என்றாராம். அதுக்குப்பிறகு தான் அந்த அம்மா சம்மதிச்சு புத்தகமா போட்டாங்க..புத்தகம் வந்தபிறகு ரொம்ப பரபரப்பாய் இருந்துச்சு. எழுத்தாளர் சுந்தரராமசாமி " காகங்கள் " கூட்டத்துல இதைப்பற்றி பேசப்போறோம்..நீங்க கட்டாயம் வரணும் " ன்னு கடிதம் போட்டிருந்தார். நானும் தேவதச்சனும் போயிருந்தோம். நாலு பேரு பேப்பர்ல எழுதி வாசிச்சாங்க..நல்ல அலசி ஆராய்ந்து இது நாவல் இல்ல.நாவல்னு யாரும் மயங்க வேண்டாம்..னு சொல்லிட்டாங்க. அப்புறம் கடைசியா சுந்தரராமசாமி நாவல்ன்னா இப்படி எல்லாம் இருக்கணும்..இதுல அப்படி எதுவும் இல்லை பிறகு எப்படி நாவல்னு ஒத்துக்கிடுவது ன்னு சொல்லிட்டார்..


என்கிட்ட நீங்க நாலு வார்த்தை பேசுங்க என்று சொன்னாங்க. நான் ஒன்னும் சொல்லலை. கூட்டம் முடிஞ்சு கீழே வரும்போது, சு.ரா.கேட்டாரு..நாங்க எல்லோரும் நாவலே இல்லேன்னு சொல்றோம்.நீங்க ஒண்ணுமே சொல்லலியே..குடிக்க தண்ணி கூட கேக்கலியே..அப்படின்னாரு.

நான் இதை நாவல்னு எழுதல..லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நாவல்னு போட்டாரு..இப்ப நீங்க இதை நாவல் இல்லேன்னு சொல்றீங்க..இனிமேல் பேசி பிரயோசனம் இல்லை..இனி நான் என்னத்தை சொல்றது. நானோ எழுதி முடிச்சிட்டேன்..என்றேன். கணையாழியில் கோபல்ல கிராமம் பற்றி பகீரதன்ன்னு ஒருத்தர் விமர்சிக்கிறார். இந்த நாவல் பிரமாதம்..நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..அப்படின்னு புகழ்கிறார்..இப்படியாய் கோபல்ல கிராமம் உருவானது..

கோபல்ல கிராமம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கலாம் என எப்போதாவது நினைத்ததுண்டா ?


கி.ரா. உண்டு..உண்டு. ஏன்னா நாவல் வரிசையில் அதுதான் தலை. அதனால தலைக்கு கிடைக்கிறது பொருத்தம்னு நெனச்சேன்.


கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள் அளவிற்கு அந்தமான் நாயக்கர் என்ற நாவல் பேசப்படவில்லையே ஏன் ?


கி.ரா. : அந்தமான் நாயக்கர் எதுக்காக எழுதப்பட்டதுன்னா..சினிமாவிற்காக எழுதினது.. சினிமா டைரக்டர் பாலச்சந்தர் அவர்களின் மகன் கைலாசம் என்னிடம் கதை கேட்டார். அவர் அமெரிக்காவில் போயி சினிமா துறையில் சில பயிற்சிகள் பெற்றவர்ன்னு சொன்னார். இயக்குனர் பாலச்சந்தர் தனது பையனை அனுப்பிச்சாரு ஒரு கதை வேணும்னு. நான் சொன்னேன் அப்படியெல்லாம் உடனே எழுத முடியாது அப்படின்னு. அவர் மகனும் மருமகளும் பாண்டிச்சேரி வந்து ஹோட்டல்ல ரூம் போட்டு மூணு நாலு தங்கி இருந்தாங்க. அப்பமும் என்னால எழுத முடியல. அப்புறம் அவர் வந்து நீங்க எழுதி எனக்கு அனுப்புங்க என்று சொல்லி கிளம்பி போயிட்டாரு. அப்புறம் ரொம்பநாளைக்கு அப்புறம் டைரக்டர் பாலச்சந்தர் ஒரு கடிதம் போட்டாரு. கூடவே ஒரு தொகையும் அனுப்பி இதை அட்வான்ஸ் மாதிரி எடுத்துக்கிட்டாலும் சரி..நேரம் கிடைக்கும்போது கதை எழுதி அனுப்புங்க என்று எழுதியிருந்தார்.


அந்த நேரம் தினமணியில் எழுத்தாளர் மாலன் ஆசிரியராக இருந்தார். அவர் பாண்டிச்சேரி வந்தபோது என்னை பார்த்து ஏதாச்சும் எழுதுங்களேன் என்று சொன்னார். நான் கேட்டேன் ஒரு கட்டுரைக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு. எவ்வளவுனாலும் கொடுக்கலாம் எழுதுங்க என்றார். ஐநூறு தர முடியுமான்னு கேட்டேன். சரின்னுட்டார். அப்போது அது நல்ல தொகை தான். அப்படி தொடராக எழுதினது அது. சினிமாவை மனதில் வைத்து எழுதினது. கொஞ்சம் வித்தியாசமாய்தான் இருக்கும். அந்தமான் நாயக்கர் என்ற தலைப்பு கூட சினிமாவிற்காக கொடுத்த பெயர் தான். அந்த தலைப்பு மாதிரியே பின்னாடி வேறொரு சினிமா கூட வந்தது..ஆக, அந்த நாவல் பிறந்த கதை இது தான்.


கேள்வி : கவிதைக்கான காலம் முடிந்து விட்டது. இனி உரைநடைக்கான காலம். பேச்சுமொழிக்கான காலம் என்று நீங்கள் சொன்னதாக...


கி.ரா. : அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நான் வந்து கவிதைக்கு எதிரி இல்லை. கவிதையை ரசிப்பவன். ஆரம்ப காலத்தில் நானும் கவிதைகள் எழுதியவன். பேச்சுமொழியை பற்றி ஏன் சொன்னேன்னா..பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சி. தமிழில் முதல் நாவல் எழுதினார் இல்லையா..மாயூரம் வேதநாயகம் பிள்ளை..அவரோட நினைவு நூற்றாண்டு விழா நடந்தப்ப, என்னையும் கலந்துக்க சொல்லி அழைச்சாங்க..அவரோட மருமகனே வந்து அலைச்சது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்தது. கூட்டம் துவங்கும் நேரத்திற்கு முன்னதாகவே போய்விடுவது என்னோட கெட்ட வழக்கம். அப்படிப்போன இடத்தில ஆங்கில பேராசிரியர் ஒருத்தர் ஆங்கில நாவல் முதன்முதலில் எப்படி பிறந்தது என்பதை பற்றி சுவாரசியமாக சொன்னார்.

முதன்முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதினார் இல்லையா..அவரோட தொழில் டைப் ரைட்டர்ல டைப் அடிச்சு தருவது. அப்போது இங்கிலாந்தில் பெண்கள் படிக்காத காலம். கணவன்மார்கள் மிலிட்டரியில் இருக்காங்க. கணவர்களுக்கு மனைவிகள் கடிதம் எழுதிப்போடணும்.


அப்படி ஒரு பொண்ணு இவரிடம் வந்து தனது கணவருக்கு கடிதம் டைப் பண்ண சொல்றாள். உணர்ச்சிகரமாக சொல்கிறாள். இவரும் அவள் சொல்ல சொல்ல டைப் பண்ணுறார். சொல்லி முடிச்சபிறகு டைப் அடிச்சதை வாசித்து காண்பிக்கிறார் இவர்.

அந்தப்பொண்ணு சொல்லுறாள், நான் சொன்னபடி நீங்க எழுதலியே..ன்னு.

அப்படிதானேம்மா அடிச்சுருக்கேன்..அதுதானேம்மா என்னோட தொழில்..என்றார் இவர். அவளோ, நீங்க டைப் அடிச்சது சரியில்லேன்னு சொல்லிட்டா. அவரு யோசிச்சாரு. என்ன சொல்றா இவள் என்று. நான் சொன்னதுமாதிரி இருந்தா தான் பணம் தருவேன்..இல்லாட்டி தரமாட்டேன்ன்னு அவ சொல்றா.


அவள் தனது கணவனிடம் பேசுவது போன்ற பேச்சுமொழியில் சொல்றாள். இவரோ சுத்தமான ஆங்கிலத்தில் டைப் பண்ணுறார். பிறகு அதை அவர் புரிஞ்சுசுகிட்டு அவள் சொன்னதுபோலவே, பேச்சுமொழி ஆங்கிலத்தில் டைப் பண்ணி வாசிச்சு காட்டுறார்.

இதுதான் சரி என்று அப்புறம் சொல்கிறாள் அவள். டைப் அடித்த அந்த மனிதர் தனது வீட்டிற்கு மதியம் சாப்பிடப்போகும்போது தன்னோட அன்புமகள் ட்ட இதை சொல்றார். தனது ஆபீஸ்ல என்ன நடந்தாலும் மகளிடம் சொல்வார் போல. அன்றும் இதை மகளிடம் சொல்ல, அவள் சொன்னாள்" இதை நீ எழுதணும் அப்பா..மக்களின் பேச்சுமொழியில் ஒரு உரையாடலை எழுதும்போது அது ஒரு உணர்ச்சிகரமான கதை போல மாறி விடுகிறது..நீ இதை எழுது.." என்றாள். அப்படி எழுதினதுதான் முதல் ஆங்கில நாவல். பேச்சுமொழியின் முக்கியத்துவம் இலக்கியத்திற்கு எப்படி அவசியம்னு சொல்ல இதை நான் சொல்வேன்.


தொடரும்...

257 views
bottom of page