top of page

நேர்காணல் - பாகம் 2

உங்களுக்கு இலக்கிய முன்னோடி என்று யாரை சொல்வீர்கள் ?


கி.ரா. : என் எழுத்துக்கு முன்னோடி என்று யாரும் இல்லை.நானாகத்தான் எழுதினேன். அப்படி யாரும் இருந்தாங்கன்னு சொன்னால், அது பொய் சொன்னமாதிரி ஆகி விடும்.


அவுரிச்செடி பற்றி சிறுகதை எழுதியுள்ளீர்கள். வட இந்தியாவில் அவுரிப்பயிர் செய்யச்சொல்லி வெள்ளைக்காரன் கட்டாயப்படுத்தியதாகவும், அதை எதிர்த்து அங்கெ போராட்டம் நடந்ததாகவும் வரலாற்று செய்திகள் உண்டு. கரிசல்காட்டில் அவுரியை ஒரு பணப்பயிர் போல எழுதி உள்ளீர்கள். இது பற்றி சொல்லுங்க..


கி.ரா : அவுரியை பயிரிடும்போது மானாவாரியில் தான் கலப்படமாய் போடுவோம். மகசூல் எடுத்தப்புறமும் அவுரி இருக்கும். இதிலே என்ன விஷேசம்னா அவுரியை ஆடு திங்காது..மாடு திங்காது..ஆரம்பத்திலே அவுரிக்கு நல்ல விலை கொடுத்தாங்க. அடுத்த வருஷமே ரொம்ப குறைச்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க..இதனால விவசாயிகளுக்கு ரொம்ப கோபம். இந்த அவுரியை நாம பயிரிட வேண்டியதில்லைன்னு முடிவு செஞ்சாங்க..வடக்கே வேண்டுமானால் போராட்டம் நடந்திருக்கலாம்..இங்கே யாரும் போராடலை...ஆனால், இந்த அவுரியை வாங்கி விற்கும் வியாபாரிகள் புதுசு புதுசாக காரில் பவனி வருவதை நானும் பார்த்திருக்கேன்..


இசைத்துறையில் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. விளாத்திகுளம் சுவாமிகள் இசை குறித்து ரொம்பவே சிலாகித்து பேசியிருக்கீங்க..நாதஸ்வரம் கூட கொஞ்சம் கற்றுக்கொண்டீர்கள்..

அந்தத்துறையில் போக முடியவில்லை என்ற ஆதங்கம் இன்னும் உள்ளதா ?

இன்னும் உள்ளதுன்னு சொல்ல முடியாது. ஆனால் ஒரு ஏக்கம். ஒரு பெண்ணை காதலிச்சு, அவள் இன்னொருத்தனை கட்டிட்டுப் போயிட்டான்னு வைங்க..நமக்கு கிடைக்கலியேன்னு ஏக்கம் இருக்கும் இல்லையா..சங்கீதத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஏக்கம் உண்டு.


எழுத்தாளர் புதுமைப்பித்தனை நீங்கள் சந்தித்ததுண்டா?


கி.ரா. : இல்லை. சந்தித்தது இல்லை. சிதம்பர ரகுநாதன் வீட்டுக்கு திருநெல்வேலி போறப்ப எல்லாம் போவேன். ராத்திரி முழுக்க பேசிட்டு இருப்போம். அப்படி ஒருநாள் பேசிட்டு இருக்கும்போது, " இன்னைக்கு புதுமைப்பித்தன் வர்றாரு..தெரியுமா.." ன்னாரு. அப்படியா பார்ப்போமே ன்னேன். ரெண்டு பேரும் அவருக்கு ரொம்ப பிடிச்ச திருநெல்வேலி அல்வாவை வாங்கிட்டு திருநெல்வேலி ரயில் நிலையம் போனோம்.

கடைசில பார்த்தா, அந்த ரயிலில் அவரு வரலைன்னு சொல்லிட்டார்.

அப்படி பார்க்காமலே போய்ட்டு.





எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனோடு இருந்த அனுபவங்கள்...


கி.ரா. ரகுநாதன் அடிக்கடி இடைச்செவல் வருவாரு. அப்போது நான் புதுவீட்டுல இருந்தேன்..திருநெல்வேலிக்கு போற வழியிலே இறங்கி என்னை பார்த்துட்டுதான் போவாரு..அதெல்லாம் அருமையான நாட்கள்..அவரைப் பத்தி நிறைய சொல்லலாம்...


புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு உங்களை வருகைதரு பேராசிரியராக நியமனம் செய்றப்ப என்ன மாதிரியான மனநிலை உங்களுக்கு இருந்தது...


கி.ரா.: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் எனக்கு கடிதம் போட்டிருந்தார்..இன்னமாதிரி..உங்களை நாங்க வருகைதரு பேராசிரியராக நியமித்திருக்கிறோம்..வந்து உடனே ஜாயிண்ட் பண்ணுங்கன்னு. எனக்கு கடிதத்தை பார்த்தவுடன் ரொம்ப தயக்கம். பேசாமல் இருந்தேன்..மறுபடியும் ஒரு கடிதம் வந்தது, ஏன் வரலைன்னு. நான் பதில் கடிதம் போட்டேன்..எனக்கு உடனே வரமுடியாத சூழல்.எனக்கு டயாபடீஸ் நோய் இருக்கு..அப்படி இப்படின்னு எழுதி அனுப்பினேன். அவரு சொன்னாரு..நீங்க சொல்ற நோயெல்லாம் எனக்கும் இருக்கு..நீங்க இங்கே வந்தீகன்னா, நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த நோயை எதிர்த்து போராடலாம்..உடனே புறப்பட்டு வாங்கன்னு சொல்றாரு.


அதுக்கப்புறமும் எனக்கு தயக்கம். இந்த நேரத்துல எனக்கு சொந்தக்காரரு ஒருத்தர் வீட்டுக்கு வந்தாரு.அவரு சொன்னாரு..மாமா, ஒடனே நீங்க புறப்பட்டுப் போகணும். இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நீங்க வேணும்னா ஒன்னு செய்யுங்க.. தேதி போடாத ஒரு ராஜினாமா கடிதம் எழுதி உங்க சட்டை பையிலேயே வச்சுக்கோங்க..பிடிக்கலேன்னா அந்த கடிதத்தை கொடுத்துட்டு உடனே வந்துருங்க..போய்த்தான் பாருங்களேன்..அப்படின்னாரு. எனக்கும் இந்த யோசனை நல்லாதப்பட்டது. ஒரு ராஜினாமா கடிதம் எழுதி வச்சுக்கிட்டு உடனே கிளம்பினேன். கூடவே கோவில்பட்டி மாரிஸ் வந்தாரு. அவரு எனக்கு இன்னொரு கை மாதிரி. ரெண்டு பேரும் போனோம். அங்கெ அ.ராமசாமி போன்றவங்கள்லாம் இருந்தாங்க..இப்படியாய்ப் போய் சேர்ந்தேன்..


போகும்போது ஏற்பட்ட ரயில் பயண அனுபவத்தையும் இந்த நேரம் சொல்லணும். ஒரு பெரிய பெட்டியில் என்னோட ஆடைகள், கொஞ்சம் புத்தகங்கள் வச்சிருந்தேன். ரயிலு விழுப்புரம் வந்தவுடன் ஒரு டிடி ஆரு எங்க பெட்டியில் ஏறினார். என் அருகில் வந்தவர், உங்க பெட்டியிலே என்னென்ன பொருட்கள் வச்சிருக்கீங்கன்னு திறந்து காட்டுங்க என்றார். எனக்கு முதலில் புரியவில்லை. பாண்டிச்சேரி வேற நிர்வாகம்..நீங்க என்னென்ன கொண்டு வாறீங்கன்னு பார்க்கணும். அதே மாதிரி பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு போகும்போது பாட்டில் எதுவும் கொண்டு போறீங்களான்னு பாப்போம் என்றார்.


நான் சொன்னேன் " நீங்க பாண்டிச்சேரியில் இறங்கிருவீங்கள்ள அப்ப என்னோட பெட்டியை திறந்து காண்பிக்கிறேன். பிளாட்பாரத்தில் வைத்து நீங்க நல்லா பார்த்துக்கிடலாம் "

அவரும் சரின்னுட்டு போயிட்டார். பாண்டிச்சேரி ரயில் நிலையத்துல தடபுடலா வரவேற்பு கொடுத்தாங்க..ரொம்ப பேரு வந்திருந்தாங்க. அதைப்பார்த்த அவரு " இவரு யாரோ போல..நாம கேட்டது தப்பா போச்சோ" என்று நினைத்தாரோ என்னவோ சொல்லாம கொள்ளாம மாயமா மறைஞ்சு போயிட்டாரு..( சிரிக்கிறார் )


கேள்வி : கோவில்பட்டியில் ஸ்டேட் பேங்க் மேலாளராக பணிபுரிந்த பாவாடை ராமமூர்த்தி..அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அவரை நினைவில் இருக்கா ?

பாவாடை ராமமூர்த்தி பற்றி சொல்லனும்னா ஒரு புஸ்தகமே போடலாம். அவ்வளவு இருக்கு. " நண்பர்களும் நானும் " அப்படின்னு ஒரு புஸ்தகம் எழுதியிருக்கேன். அதில் அவரைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கேன். அதை எல்லோரும் படிச்சு பார்க்கணும்.


கேள்வி :இடைசெவலில் இருந்த காலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் சிறை சென்றுள்ளீர்கள். விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளராக கூட இருந்துள்ளீர்கள். அந்த சிறை அனுபவங்களை எழுதி உள்ளீர்களா ?

கி.ரா. : சிறை அனுபவங்கள் குறித்து கொஞ்சம் தான் எழுதியுள்ளேன். அந்த அனுபவங்களை, கஷ்டங்களை, அதில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் எழுதணும்னு ஆசைதான்..இனிமேல் எழுத முடியுமான்னு தெரியல..

உங்கள் நெடிய வாழ்க்கைப்பயணத்தில் கணபதி அம்மாள் ஒரு பெரும் உந்துசக்தி. அவங்களைப்பத்தி...

அதைப்பற்றி சொல்ற நிலையில் நான் இல்ல..சொல்லும்போது ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விடுவேன்..வேண்டாம்..(கண்கள் கலங்குகின்றன அவருக்கு )


உங்கள் மகன் பிரபாகரன் என்ற பிரபி கதைகள் எழுத ஆரம்பித்துள்ளார். ஒரு வாசகனாய் அவரது எழுத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

கி.ரா. அவன் என்னைப்பின்பற்றி எழுதுவதாக சொல்லி, அதே பேச்சுவழக்கு மொழியை கையாள்கிறான். அதைப்பற்றி வாசகர்களும்,விமர்சகர்களும் தான் சொல்ல வேண்டும். எல்லா பெற்றோர்களும் சொல்ற மாதிரி, நானும் " நல்லாத்தான் எழுதுறான் "

என்றே சொல்வேன். மற்ற விஷயங்கள் பற்றி வாசகர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.


இடைச்செவல் ஊருக்கு போயி நாளாகி விட்டது. ஊரை உங்களுக்கும் தேடும் இல்லையா..பழைய நண்பர்கள் யாரும் அங்கெ இருக்காங்களா ?

கி.ரா. யாரும் இல்லை..எனக்கு இப்ப யாரும் இல்லை. எனக்கு பிரியமான ஆண், பெண் அனைவருமே போயிட்டாங்க..நான் மட்டும் இப்ப தனியாக இருக்கேன்..


நோபல் பரிசு பெற்ற நாவல்கள் படித்த அனுபவம் உண்டா ?

எனக்கு தமிழ் தவிர வேற மொழிகள் தெரியாது. அந்த காலத்துல விமர்சகர் க.நா.சு.மொழிபெயர்த்த நோபல் பரிசு பெற்ற நூல்களை வாசிச்சுருக்கேன்.. அவ்வளவு தான்.


சமீபத்தில் " அண்டரெண்ட பட்சி " என்ற குறுநாவலை எழுதி முடித்துள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றதா ?


கி.ரா. : அடேங்கப்பா..ரொம்பவே வரவேற்பு. இந்த நாவலை நான் 250 பக்கங்களில் எழுதினேன். அப்புறம் வாசிச்சு பார்க்கும்போது, அதுல வேண்டாத அரசியல்லாம் இருந்தது. எல்லாம் தள்ளிட்டு அதை நாற்பது பக்கமாய் குறைச்சேன். இந்த நாவல் எழுதுனதுக்கே காரணம் இளவேனில் தான். அவனை நான் பாபு ன்னு தான் கூப்பிடுவேன். இவன் தான் ஏதாச்சும் எழுதிக்கொடுங்க..எழுதிக்கொடுங்கன்னு சொல்வான்.அவன் சொன்னதுக்காகத்தான் இதை எழுதினேன். அப்புறம் படிச்சப்ப, இது ஒரு மாதிரி இருக்குப்பா..செக்ஸா தெரியுது.


இதைப்படிச்சுட்டு போலீஸ் நடவடிக்கை ஏதும் வருமான்னு தெரியல. அந்தக்காலத்துல, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் " முதலிரவு " ன்னு ஒரு கதை எழுதினார். அதுக்காக அவரை ஒரு மாசம் ஜெயில்ல போட்டுட்டாங்க..எழுத்துக்காக ஜெயில்ல போன ஒரே தமிழ் எழுத்தாளன் அவராகவே இருக்கட்டும்..நாம் இந்த வயசுல போயி சங்கடப்பட வேண்டாம்..என்ன பண்றதுன்னு யோசிச்சேன். ராஜேந்திரன் ஐ.ஏ எஸ். அவருக்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி படிச்சு பார்த்துட்டு அபிப்பிராயம் சொல்லுங்கோ..உங்களுக்கு தெரிஞ்ச லாயர் யாரேனும் இருந்தாலும் ஆலோசனை பண்ணி சொல்லுங்கோ..பிரச்னை ஏதும் வருமா என்று கேட்டிருந்தேன். அவரும் படிச்சு பார்த்துட்டு " எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு. ஆபாசமாக எதுவும் இல்லை..அற்புதமாய் நிறைய விஷயங்கள் நிறைய சொல்றீங்க..அதெப்படி இதாகும்?..ஆனாலும் யோசிச்சுக்கிடுங்க.." என்றார். அதனால், நானும், இளவேனிலும் இதை இப்படியே கைப்பிரதியாய் இருக்கட்டும் என்று முடிவு பண்ணினோம்.


இதற்கு முன்னோடியாக ஆங்கில கவிஞன் பைரன் இருக்கிறார். அவரது சில படைப்புகள் கையெழுத்து பிரதியாகவே உலகம் முழுவதும் சுற்றி பிரபலம் ஆனது. அதைப்போல, இதுவும் கையெழுத்து பிரதியாகவே இருக்கட்டும் என்று முடிவு செய்து விட்டோம். பெண்கள்லாம் கூட வரவேற்றாங்க..அந்த அளவில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லணும்.


தமிழின் இளைய படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கிறீர்களா ?


கொஞ்ச காலம் முன்பு வரைகூட வாசிச்சேன்..பெயர்கள் சட்டென்று இப்போ சொல்ல முடியல..தற்போது கண்கள் ஒத்துழைக்க மாட்டேங்குது. வாசிக்க முடியலை. மனுஷாளை பார்க்க முடியுது. பத்திரிக்கையில் உள்ள பெரிய எழுத்துக்களை வாசிக்க முடியுது. நிறைய வாசிக்க ஆசைதான். ஆனால் என்னால் முடியல..


கோவில்பட்டியில் ஒரே சமயத்தில் பூமணி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ.தர்மன், கோணங்கி, கௌரிஷங்கர், அப்பாஸ், உதயசங்கர், நாறும்பூநாதன், சாரதி,அப்பணசாமி, திடவை பொன்னுச்சாமி, வித்யாஷங்கர் என்று பெரிய எழுத்தாளர்கள் உருவானதை எப்படி பார்க்கிறீர்கள் ?

இதை ஒரு அதிசயம்னு தான் சொல்லணும். இதை திட்டமிட்டு யாரும் செய்ய முடியாது. தானாக நடந்தது. எங்களால் முடிந்தது, " கரிசல் கதைகள் " என்ற ஒரு ஆங்கில தொகுப்பு கொண்டு வந்தது. இப்போ நினைச்சால் கூட ஆச்சரியமா இருக்கு. அதுல, இந்த எழுத்தாளர்கள் எல்லாரும் கதைகள் எழுதி இருக்காங்க..


கோவில்பட்டியில் இடதுசாரி அமைப்பை சேர்ந்த பால்யகாலத்தோழர்கள் பால்வண்ணம்,கோபாலசாமி, ஜவகர்,ஆர்.எஸ்.மணி, தேவப்பிரகாஷ் போன்றோர் உங்களோடு மிகவும் நெருங்கிப் பழகியவர்கள். எழுபதுகளின் துவக்கத்தில் பாம்பு கடித்து கோவில்பட்டி மருத்துவமனையில் நீங்கள் அனுமதிக்கப்பட்டபோது கூடவே இருந்து கவனித்துக்கொண்டவர்கள். வீடுகளில் இலக்கிய கூட்டங்களை நடத்தி தாமரை, செம்மலர், கண்ணதாசன், கணையாழி போன்ற இதழ்களில் வரும் கதைகள்,கட்டுரைகளை விமர்சித்து கூட்டங்கள் நடத்தியதையும் அவற்றில் நீங்கள் பங்கேற்று பேசியதையும் இப்போதும் நினைவு கூறுவார்கள். அந்த தோழர்களை நினைவு கூற முடிகிறதா ?


கி.ரா. : அதெல்லாம் பொன்னான நாட்கள்..இலக்கிய விவாதங்களில் பெரிய சர்ச்சை எல்லாம் கூட வரும்..கரண்ட் கதை பற்றியும் பேசியிருக்காங்க..தோழர்களை எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு..பால்வண்ணம் மட்டும் நினைவில் இருக்கார். மற்றவர்கள் பெயர்கள் சட்டென்று நினைவில் வரலை..ஆர்.எஸ்.மணி..அவர் கொஞ்ச காலம் முன்பு பாண்டிச்சேரி வந்து என்னை பார்த்தார்..பழைய விஷயங்களை சொன்னபிறகு கண்டுபிடிக்க முடிந்தது..( நாறும்பூ வின் அண்ணன் என்று சொன்னார்.)


கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த அனுபவங்கள் உங்களுக்கு உண்டு. இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சொல்லுங்கள்..

கி.ரா.: இடதுசாரிகள் பற்றி சொல்ல நிறையவே இருக்கு. அவர்களுக்கு என்று ஒரு தத்துவம் இருக்கு. அவர்களுக்கு என்று ஒரு நடைமுறை இருக்கு. அவர்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார்கள். ஆனால், கேட்டு நடக்க மாட்டார்கள் என்ற வருத்தம் ரொம்பவே உண்டு.

அந்த அனுபவத்தை இங்கே பகிர வேண்டாம் என்றே நினைக்கிறேன்.


கோவில்பட்டியில் சாத்தூர் டீ ஸ்டால் ரொம்ப பிரபலம். அங்கு தான் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தோழர் அழகர்சாமி, தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன், தோழர் ரெங்கசாமி போன்றோர் கூடுவர். அக்காலத்தில் இன்டெர்மீடியட் தேர்ச்சி பற்ற தோழர் ரெங்கசாமி ஆங்கில இதழான நியூ ஏஜ் பத்திரிக்கையை அங்கெ வாசித்து காட்டுவார் என்று சொல்வார்கள்.

உங்கள் கதையில் வரும் தோழன் ரெங்கசாமி, இவரை மனதில் கொண்டு எழுதியதா ?

சாத்தூர் டீ ஸ்டால் வரும் தோழர் ரெங்கசாமிக்கும், எனது கதாபாத்திரம் தோழன் ரெங்கசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சில விஷயங்களை அவரிடம் இருந்து எடுத்துக்கிட்டேன். அவருடைய தோற்றம் மற்ற விஷயங்கள்..அவர் நல்லா ஆங்கிலம் பேசுவார். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த சொத்து..அவரை நாம் இழந்துட்டோம்..எல்லாவற்றையும் இழந்துட்டோம். இது பெரிய துரதிர்ஷ்டம்..கட்சிக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம்..(கண் கலங்குகிறார் )

இழப்புக்கு கணக்கு வழக்கு எல்லாம் கிடையாது. வேறு என்ன செய்ய என்றும் அவர்களுக்கு தெரியல..கம்யூனிஸ்ட்கள் நல்ல எதிர்கட்சிகாரங்க..மக்கள் பிரச்னைகளை ஆழமாய் பேசுவாங்க..

கேரளாவில் ஆளும்கட்சியாய் வந்தபோது கூட நிறைய நல்ல விஷயங்கள் பண்ணினாங்க..அதனால் இப்பவும் அங்குள்ள மக்கள் மாறி மாறி வாய்ப்பு கொடுத்திட்டே இருக்காங்க..


முப்பது ஆண்டு புதுச்சேரிவாசம் எப்படி உணர்கிறீர்கள் ?

கி.ரா. : எனது வாழ்நாள் சரிதம் எழுதியபோது இதைப்பற்றி எழுதி இருக்கேன்.

வேதபுரத்தார்க்கு..என்ற நூல் எழுதியிருக்கேன். புதுச்சேரி ரொம்ப பிடிச்சுருக்கு. எனக்கு ரொம்ப திருப்தியாக இருப்பதால்தான் இங்கேயே இருக்கேன். எனக்கு இங்கே நல்ல நண்பர்கள் உண்டு. ஆரம்பத்தில் பணகஷடம் இருக்கத்தான் செய்தது. அதை நான் பல்வேறு வகைகளில் சமாளிச்சேன். பல இலக்கிய அன்பர்கள் மூலம் உதவி கிடைத்தது. இப்போ நான் நல்லா இருக்கேன்..நோயாளி கஷடம் தான்..அதோட சேர்ந்து தானே வாழனும்...


புதுச்சேரி இலக்கியவாதிகள், நண்பர்கள் பற்றி சொல்லுங்க..


கி.ரா.: புதுச்சேரி இலக்கியவாதிகள் சற்று வித்தியாசமானவர்கள் என்றே சொல்லணும். ஏன்னா..அவர்களுக்கு என்று சில விஷயங்கள் வச்சிருக்காங்க..அது தப்புன்னு சொல்ல மாட்டேன். அது அவர்கள் இயல்பு. நல்லா இலக்கியவாதிகள் கிடைச்சதும் இங்கே தான்..சரியான இலக்கியவாதிகள் கிடைச்சதும் இங்கே தான்.

பஞ்சாங்கம், வெங்கட சுப்புராய நாயகர்,சிலம்பு நா.செல்வராசு, பி.என்.எஸ்.பாண்டியன் ...இன்னும் நிறைய நண்பர்கள் இருக்காங்க..இந்த ஊருக்கு வந்ததில் இருந்து நல்லா கவனிச்சுக்கிட்டாங்க..பக்தவச்சல பாரதி எனக்கு கிடைச்ச நல்ல நண்பர்களில் ஒருவர். அப்புறம், இளவேனில்..இவனை நான் பாபு ..பாபு என்று தான் கூப்பிடுவேன்.

இளவேனில் எனக்கு கிடைச்சது ஒரு அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும்.

உண்மையான அதிர்ஷ்டம்..அதுக்கு மேல் புகழ்ந்தால் அது மிகையாகி விடும்...

( ஆனந்தமாய் ஒரு சிரிப்பை உதிர்க்கிறார் )


நேர்காணல் : எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன்

335 views
bottom of page